என்கிட்ட நிறைய பேர் கேப்பாங்க, “நீ ஏன் வெளிநாட்டுக்குப் போகல? அங்கே போனா நிறைய சம்பாதிக்கலாமே?” அப்படின்னு. எனக்கென்னவோ என்னோட தேவைகளெல்லாம் இங்கேயே கிடைச்சுடுது, உண்மையில அதெல்லாம் வேற எங்கேயும் கிடைக்காது. நானும் எனக்கு சந்தோஷம் கொடுக்கிற காரியங்களை செஞ்சிட்டு வாழ்க்கைய இங்கேயே சந்தோஷமா தான் வாழ்ந்துட்டிருக்கேன். அமெரிக்காவிலிருந்து மங்கோலியா வரைக்கும் எல்லா நாட்டையும் சுத்திப் பார்க்கனும்கிற எண்ணம் எல்லாம் உண்டு தான், ஆனா வெளி நாட்டுல போய் செட்டில் ஆகனும்னெல்லாம் எண்ணம் வந்ததில்லை, அதுக்கான தேவையும் உணர்ந்ததில்ல. அப்படியிருந்தாலும் ஒரு ஒரு சமயம், “ஒருவேளை நாம வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முயற்சி செய்யாம நிறைய வாய்ப்புகளை தவறவிட்டுட்டு வறோமோ” அப்படின்னு மனசுல ஒரு சஞ்சலம் வந்துட்டே இருக்கும்.
அப்படியிருக்கையில, கொஞ்ச நாள் முன்னாடி அமெரிக்கால இருக்கிற என்னோட நண்பர் ஒருவர் என்கிட்ட சொன்னார், “காசு சம்பாதிக்கனும்கிறதுக்காக வேற வழியில்லாம இங்கே இருந்துட்டிருக்கேன். என்னோட ஆசை என்னன்னா, நம்ம தாய்நாட்டுக்கு தொண்டு செய்யனும், இங்கே இருந்துட்டு நாட்டுக்காக பெருசா ஏதும் செய்ய முடியலையேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்”, அப்படின்னு. ஆஹா, இங்கே இருக்கவங்கெல்லாம் அங்க போகனும்னு விரும்புறாங்க, ஆனா இவர் என்னன்னா அங்கே இருந்துட்டு கவலைப்பட்டுட்டு இருக்காரே ன்னு நெனச்சேன். அப்ப தான் புரிஞ்சுது, ஒரு ஒருத்தருக்கு ஒரு ஒரு ஆசை, தேவை. நம் எல்லாருக்குமே, நமக்கு இப்ப என்ன தேவையோ அது நமக்கு தவறாம கிடைக்குது. நாம தான் அதை எடுத்துக்காம அடுத்தவனை பார்த்து நமக்கு இல்லாததை நினச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கோம்.
உண்மையில ஏழைங்கிறது யார்? தன்னோட தேவைகளை புரிஞ்சுக்காதவன் தானே ஏழை? நம்ம அமெரிக்க நண்பர் தன்னோட தேவை, சந்தோஷம் எல்லாம் தாய்நாட்டுக்கு தொண்டு செய்றதுல தான் இருக்குன்னு புரிஞ்சிக்காம அமெரிக்கால போய் குப்பை கொட்டிட்டிருக்கார். அவர் கிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் அவருக்கு தேவையானதை அவர் ஒதுக்குறதால அவர் ஏழை தானே? திருவண்ணாமலையில் இருக்கிற ஒரு சன்யாசியை பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நல்லா பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுவாராம், அவரோட பேச்சை கேட்க அவரோட இடத்துல தினமும் பெரிய கூட்டம் கூடுமாம். அப்படி அவர் பேச்சை கேட்க வர்ற பணக்காரங்க எல்லாம் நெறைய பணம் எடுத்து வந்த அவர் காலில் கொட்டுவாங்களாம், நிறைய பேர் திண்பண்டங்கள், துணிமணியெல்லாம் காணிக்கையா கொண்டு வந்து தருவாங்களாம். சன்யாசி எதையுமே மறுக்க மாட்டார். ஆனா அவருக்கு வரும் காணிக்கைகளெல்லாம் எல்லாம் அப்படி அப்படியே அவரை பார்க்க வர்றவங்க கிட்ட பிரிச்சு கொடுத்திடுவராம், அவர் எதுவும் எடுத்துக்க மாட்டார். பொழுது முடிஞ்சு ராத்திரி படுக்கப் போகும் போது அவர்கிட்ட ஒரு பொருளும் இருக்காதாம். அப்படியே தரையில ஒரு துணியை விரிச்சு கை மேல் தலை வைச்சு நிம்மதியா தூங்குவாராம். அவரோட சொத்தெல்லாம் ஒரு ஓலை குடிசையும் உடம்புல சுத்திக்கிறதுத்கு துணியும் தான். இதுவல்லவா வாழ்க்கை! இவர் ஏன் இப்படி இருக்கார்? ஏன்னா இவருக்கு காசு பணம் எதுவும் தேவையே இல்ல. இவர் வாழற யோக வாழ்க்கையிலேயே இவருக்கு சந்தோஷம் இருக்கு, அது போதும் அவருக்கு. தனக்கு எது தேவை, எது தேவையில்லை ன்னு புரிஞ்சு வைச்சிருக்கிற இவர் தானே நம்ம அமெரிக்க நண்பரை விட பெரிய செல்வந்தர்?
ஆனா எல்லாருமே அந்த சன்யாசி மாதிரி இருந்துட முடியாது. உலகத்துல இருக்கிற எல்லாருமே அவங்கவங்க ஒரு குடிசைய போட்டுட்டு தரையில படுத்து தூங்கிட்டிருந்தா உலகம் என்ன ஆவறது? அந்த சன்யாசியோட தேவை யோகம் செய்து அதிலிருந்து கிடைக்கிற ஞானத்தை மக்களோட பகிர்ந்துக்கிறது. நீங்க வெளிநாட்டுல பொருளாதார ரீதியா நல்ல சுபிட்சமா இருந்துட்டிருந்தா சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க! உங்களுக்கு என்ன தேவையோ அது தான் உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஆனா அதை அனுபவிக்காம இந்தியாவுக்கு வந்து தொண்டு செய்யனும்னு புலம்பிட்டிருந்தா உங்களை விட ஏழை வேற யாரும் கிடையாது. அந்த மாதிரி புலம்பறதால யாருக்கும் எந்த பயனுமில்ல. அதே மாதிரி, நீங்க ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பணக்காரராகனும்னு ஆசைப்பட்டீங்கன்னா தாராளமா பணம் சம்பாதிக்கிற முயற்சியில ஈடுபடுங்க. அடிமட்டத்திலிருந்து சொந்த முயற்சியால பெரிய உயரங்களையெல்லாம் தொடும் அந்த அனுபவத்தை அனுபவிக்கிறதுக்காக தான் நீங்க உலகத்துல இந்த நிலைமையில வந்து பொறந்திருக்கீங்க. பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு உங்க சக்திகளையெல்லாம் அதில் செலவிட்டு பெரிய ஆளா வருவதற்கு என் வாழ்த்துக்கள். ஆனா உங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை விட்டுட்டு “கடவுளே, என்னை ஏன் ஏழையா படைச்சே?”, அப்படின்னு புலம்பிட்டிருந்தா நீங்க வாழ்க்கை பூரா புலம்பிட்டே தான் இருப்பீங்க. ஆனாலும் ஒருசிலர் இருக்காங்க, அவங்களோட சந்தோஷமே புலம்பறதிலே தான் இருக்கு, பார்த்தீங்கன்னா, அவங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அதையெல்லாம் பூர்த்தி செஞ்சிக்க கூடிய வசதியெல்லாம் இருக்கும். ஆனாலும் தான் கஷ்டப்படுறதா கற்பனை பண்ணிட்டு அதை மத்தவங்க கிட்ட சொல்லி சொல்லி அழறதிலே தான் அவங்களுக்கு பரம் சந்தோஷம். அவங்க புலம்பலிலேயே சந்தோஷத்தை காணட்டும்… அவங்களையெல்லாம் திருத்தவே முடியாது.
உலகத்திலேயிருக்கிற எல்லா மனுஷங்களுமே பணக்காரங்களாயிட முடியாது. அடிப்படையான பொருட்கள் எல்லாருக்குமே கிடைக்கினும்கிறதுல எந்த மறுப்புமே கிடையாது. ஆனா எல்லோருக்குமே பணக்காரராகனும்கிற தேவை கிடையாது. சிலருக்கு பணம் தேவையா இருக்கலாம்… சிலருக்கு தன்னோட ஞானத்தை வளர்த்துகிறதே முதல் தேவையா இருக்கலாம். சிலருக்கு தொண்டு செய்து அதனால கிடைக்கிற ஆத்ம திருப்தி தேவையா இருக்கலாம்… சிலருக்கு தன் செல்லப் பூனையை தடவிக்கொடுக்கிறதுல கிடைக்கிற சந்தோஷமே ஏழேழு ஜென்மத்துக்கும் போதும். இது எதுலையுமே தப்பு இல்ல. நாம் நம்மோட தேவையை தெளிவா புரிஞ்சிட்டு , நாம் வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டதா இருந்தாலும் அதை 100% அனுபவிச்சு சந்தோஷமா வாழறோமா? அது தான் முக்கியம். அதை விட்டுட்டு அடுத்தவன் தேவையை தன் தேவையா தப்பா புரிஞ்சிட்டு அடுத்தவன் வாழற வாழ்க்கையை பார்த்து பொறாமைப் படுறதாலதான் உலக்திதுல எவ்வளவு துன்பம். எல்லாருமே இஞ்சினியர் ஆகனும், எல்லாருமே வெளிநாடு போகனும், எல்லாருமே கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டு கண்ணை கசக்கிக்கனும்… ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் எடுத்திட்டு அதுக்காக ஒரு கோடி பேர் போட்டி போடறோம். அந்த போட்டியில ஜெயிக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்களா? அதுவும் இல்லை. உலகத்தில இருக்கிற எல்லாருமே தன்னோட தேவை என்னன்னு சரியா புரிஞ்சிட்டு வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தா எல்லாருடைய தேவைகளுமே பூர்த்தி செய்யப்பட்டுவிடும் தானே? அது தானே சுபிட்சமான சமூகம். யாருமே சொத்து வைச்சுக்கக் கூடாதுன்னு சொல்ற சமூகமோ, அல்லது எல்லாருமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்கிற நிலைமையை ஏற்படுத்தி, ஒருவர் பணம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை வைச்சே அவரோட வாழ்க்கைத் தரத்தை நிர்நயிச்சு தரம் பிரிக்கிற சமூகமோ சரியான சமூகமாக இருக்க முடியாது. ஒருவரோட பாங்க் அக்கவுன்ட்ல எவ்வளவு பணம் நிறைஞ்சிருக்குங்கிறத வைச்சு அவர் வாழ்க்கைத் தரத்தை நிர்நயிக்க முடியாது. அவர் மனம் எவ்வளவு நிறைவா இருக்கிங்கிறதை வைச்சு தான் முடியும்.
தன்னோட தேவை என்னன்னு தெளிவா புரிஞ்சுகிட்டு தனக்கு கிடைச்ச வாழ்க்கையை முழுமையா அனுபவிச்சு வாழறவன் தான் உண்மையான செல்வந்தன். தனக்கு வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக்க தெரியாம, தன்னோட தேவையை சரியா புரிஞ்சிக்காம தேவையில்லாததெல்லாம் அடைய முயற்சி செய்து கஷ்டப்படறவன் தான் பரம ஏழை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?
6 மறுமொழிகள்
10:24 இல் அக்டோபர் 6, 2007
//ஏதோ ஒரு விஷத்தை மட்டும் எடுத்திட்டு அதுக்காக ஒரு கோடி பேர் போட்டி போடறோம்.//
ஐயோ………….விஷமா?
விஷயம்னு இருக்கணும். இல்லே?
அது இருக்கட்டும், இப்ப எதுக்காக இந்தப் புலம்பல்:-))))))
10:55 இல் அக்டோபர் 6, 2007
nice one
12:32 இல் அக்டோபர் 6, 2007
விஷத்தை விஷயமா மாத்தியாச்சு.
//இப்ப எதுக்காக இந்தப் புலம்பல்//
இந்த பதிவை ஆரம்பிச்சதே அப்பப்ப இம்மாதிரி புலம்பித் தள்றதுக்குதானே
16:53 இல் அக்டோபர் 6, 2007
ஏற்ற இறக்கங்கள் அனைவருக்கும் உண்டு. புரிந்துக் கொண்டால் மகிழ்ச்சி உண்டு. வாய் திறந்தால், ஒன்று தற்புகழ்ச்சியாக, புகழுரையாக, புலம்பல்களாக இருக்கத் தான் செய்கிறது.
13:49 இல் அக்டோபர் 9, 2007
உண்மையாகவே எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிவதில் தான் எமது வாழ்வியலின் வெற்றியின் மொத்தமே தங்கியிருக்கிறது.
தேவையில்லாததை தேவையாக எண்ணுவதுவும், தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சாத்தியங்கள் காணப்பட்ட போதும் அவற்றை பூர்த்தி செய்யாததுவும் அறியாமை என்றே கூற வேண்டும்.
வாழ்வின் நிலையில் முன்னேற, தேவைகளை உணர்ந்து கொள்கின்ற வித்தையைக் கற்றுக் கொள்தலே காலம் வேண்டி நிற்கிறது.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
06:03 இல் அக்டோபர் 18, 2007
கட்டுரையை நல்ல எழுதிிருக்கிறீர்கள் , கிட்டத்தட்ட நீங்களும் சாமியார் மாதிரி எழுதிிருக்கிறீர்கள் . என்னோட கண்ணோட்டத்தில் அடுத்தவங்களை பார்த்து நமக்கு தேவாயானவற்றை முடிவு பண்ணுவது என்பது ஒருவித தாழ்வு மனப்பான்மையே , ஆதலால் அதை மாற்ற மூயர்ச்சித்தாள் நாம் நாமாக இருப்போம். தாழுவுமனப்பான்மை வருவதற்கு காரணம் நமக்குள் எந்த விதமான கட்டுப்பாடுகளும்
இல்லாததுதான் காரணம். தனிமனித நல்லொழுக்கம் மற்றும் சட்டம் மதித்தல் மூலம் அதை அடயமுடியும் !
வாழ்த்துக்கள்.