ஆகஸ்ட் 3, 2008...11:58

‘நட்பு’ பற்றி திருவள்ளுவர்

மறுமொழிகளுக்குச் செல்க

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் 782)

வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)

நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் 785)

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. (திருக்குறள் 786)

முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (திருக்குறள் 788 )

உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும். அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு.

நட்பு பற்றிய பொன்மொழி ஒன்று:

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

4 மறுமொழிகள்


மறுமொழி இடுக